இறுதி யுத்தத்தின் போது இலங்கைக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டதாகவும், ஆனால் பாஜக இலங்கை தமிழர்களோடு தோளோடு தோள் நிற்பதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் பாரதிய ஜனதா
கட்சியின் 9 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்
கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொட்டும் மழையில் பேசியதாவது :
“மயிலாடுதுறை மண்ணின் பெருமையை செங்கோல் மூலம் பிரதமர் இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார். தற்போது புதிய பாராளுமன்றத்தில் செங்கோலை
திருவாசகம் கோளறு பதிகம் தேவாரத்தோடு பிரதமர் பாராளுமன்றத்தில்
நிறுவி மயிலாடுதுறை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார். மயிலாடுதுறை மண்ணில்
உள்ள திருவாடுதுறை ஆதீனத்திலிருந்து தரப்பட்ட செங்கோலை சாட்சியாக கொண்டு
மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்.
டெல்டா காரன் என்று கூறும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில், 80 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை ஒரு மூட்டை நெல்லுக்கு கமிஷன் பெறப்படுகிறது. நெல்லுக்கும் கரும்புக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு மட்டுமே வழங்குகிறது.ஆனால் திமுக அரசு வழங்கவில்லை. மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டி தருவதாக கூறிய தமிழக அரசு, இதுவரை ஒரு வீடு கூட கட்டி தரவில்லை.
2009 ஆம் ஆண்டு ஈழ தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு போர் தொடுத்த போது இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்றது காங்கிரஸ் கட்சி. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஈழத்
தமிழருடன் தோளோடு தோள் நின்று, இன்று அவர்கள் எந்த பிரச்னையும் இல்லாமல்
இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் பிரதமர் மோடி தான். ஈழம் நன்றாக இருந்தபோது ஈழத்துக்கும் பூம்புகாருக்கும் இடையே தொடர்பு இருந்தது
அந்த தொடர்பு மீண்டும் வளர வேண்டும் என்பது நரேந்திர மோடியின் எண்ணம்.
பாட்னாவில் நடந்த கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் பின்
வாசல் வழியாக ஓடிச் சென்றவர் மு க ஸ்டாலின். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவரை முதல் ஆளாக சென்று சந்தித்தது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தான். அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை வழங்காமல்
தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்த்துவது எவ்வளவு முக்கியமோ அதேபோல கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்களுக்கு எதிராக செயல்படக்கூடிய திமுக ஆட்சியை அகற்றுவதும் முக்கியமான கடமை” என அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.







