மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பிஆர் இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம், மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தநிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக புதன்கிழமை மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்களை நூற்றுக்கணக்கான ஆண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மணிப்பூர் வீடியோ தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில் இதுவரை எந்த ஒரு முக்கியமான அலுவலும் நடத்த இயலாமல் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
இதனால், நாடாளுமன்றத்தை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் தங்களது கோரிக்கையில் இருந்து எதிர்க்கட்சிகள் பின்வாங்கப் போவது இல்லை என்பதால், அமளிகளுக்கு இடையில் அலுவல்களை நடத்த அரசு முடிவெடுத்திருந்தது.
இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி மக்களவையில் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இன்று 26 கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடி செய்தது.
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீசை காங்கிரஸ் எம்பி கெளரவ் கோகாய் நோட்டீசை தாக்கல் செய்தார்.
அதே போல பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நமா நாகேஸ்வர ராவும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்தார்.