அக்னிபாத் திட்டம் தொடர்பாக ஆலோசிக்க பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழுவை விரைவாக கூட்டுமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஜூவல் ஓரம்-க்கு கடிதம்:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.சி. வேணுகோபால், பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் ஜூவல் ஓரம்-க்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்காலிகப் பணியாகவும், ஓய்வூதியப் பலன்களும் மருத்துவப் பலன்களும் இல்லாததாகவும் அக்னிபாத் திட்டம் இருப்பதே இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நமது ராணுவத்தின் நீண்ட நெடிய பாரம்பரிய நடைமுறைகளுக்கு மாறாக வீரர்களை தேர்வு செய்வதும், தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு 6 மாதங்கள் மட்டுமே பயிற்சிக் காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதும் ஆபத்தானது என அவர் எச்சரித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட வல்லுநர்களுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படாமல் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள கே.சி. வேணுகோபால், இது குறித்து விரிவாக ஆலோசிக்க பாதுகாகப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று அதன் தலைவர் ஜூவல் ஓரம்-ஐ வலியுறுத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பாதுகாப்பு வல்லுநர்களும் அழைக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் பெறப்பட வேண்டும் என்றும் கே.சி. வேணுகோபால் வலியுறுத்தியுள்ளார்.