உத்தரப்பிரதேசத்தில் முதல்முறையாக ஒரு சோக வரலாற்றை காங்கிரஸ் இன்று பதிவு செய்துள்ளது.
முதல்முறையாக உத்தரப்பிரதேச சட்ட மேலவை காங்கிரசின் பிரதிநிதித்துவம் இல்லாத அவையாக உருவெடுத்துள்ளது.
உத்தரப்பிரதேச சட்ட மேலவை 1887, ஜனவரி 5ம் தேதி உருவாக்கப்பட்டது. எனினும், 1909ல்தான் காங்கிரஸ் சட்ட மேலவையில் பிரதிநிதித்துவத்தைப் பெற்றது. உத்தரப்பிரதேச சட்ட மேலவையின் முதல் உறுப்பினராக முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உத்தரப்பிரதேச சட்ட மேலவைக்கு 1935ம் ஆண்டு இந்திய அரசு அங்கீகாரம் அளித்தது.
மோதிலால் மூலம் தொடங்கிய ஒரு பாரம்பரியம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.
ஆம், காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு மேலவை உறுப்பினரான தீபக் சிங்கின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைந்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் மட்டுமே வெற்றி பெற்றனர்.
இதனால், மேலவைக்கு உறுப்பினர்களை அனுப்புவதற்கான வலிமையை காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது.
100 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்ட மேலவையில் ஆளும் பாஜக 72 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.









