குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு நரேந்திர மோடியின் பெயரை நீக்கிவிட்டு சர்தார் வல்லபாய் படேல் பெயரை சூட்டுவோம் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்தமாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. டிசம்பர் 1ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், 5ந்தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. டிசம்பர் 8ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பல்வேறு கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளித்துள்ளது. வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும், புதிதாக 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு அளிக்கப்படும், மாநிலமெங்கும் 3000 ஆங்கில வழி அரசு பள்ளிகள் உருவாக்கப்படும், 3 லட்ச ரூபாய் வரையிலான பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும், 500 ரூபாயில் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
மேலும் அகமதாபாத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தின் பெயர் மாற்றப்பட்டு சர்தார் வல்லபாய் படேலின் பெயர் அந்த கிரிக்கெட் மைதானத்திற்கு சூட்டப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூறியுள்ளது.