இளநிலை படிப்புகளுக்கான பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்துவிட்ட நிலையில் இன்னும் 50,737 பொறியியல் இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவரும் 442 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இணைய வழியில் கடந்த ஜூலை 22-ம் தேதி தொடங்கியது.
முதலில் மாற்றுத் திறனாளிகள் உட்பட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 775 இடங்கள் நிரம்பின. இதையடுத்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 28-ல் தொடங்கியது. முதல் 2 சுற்றுகள் முடிவில் 56,837 இடங்கள் நிரம்பியுள்ளன.
இதைத் தொடர்ந்து 3-வது சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 22-ல் தொடங்கி 26-ம் தேதி நிறைவு பெற்றது. இதில் பங்கேற்க 1,05,975 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களில் 74,251 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். அதில் தரவரிசை, இடஒதுக்கீடு அடிப்படையில் 60,967 பேருக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.
அவற்றை ஏற்றுக் கொண்டு உறுதி செய்த 49,029 மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து சேர்க்கை கடிதம் பெற்றவர்கள் ஆக.31-ஆம் தேதிக்குள் கல்லூரிக்கு சென்று சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே 3 சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துவிட்ட நிலையில் இதுவரை மொத்தம் 1,06,641 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 50,737 பொறியியல் இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. இதையடுத்து காலியிடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு செப். 6 முதல் 8-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.







