புரபஷனல் கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘புரபஷனல் கூரியர்’ என்ற தனியார் கூரியர் நிறுவனம் கடந்த 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கம், கத்தீட்ரல் கார்டன் பகுதியிலும், பதிவு அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையிலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தினர் முறையாக வருமானவரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாக வருமானவரி துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், கொரோனா காலகட்டத்தில் முறையான வருமான வரி செலுத்தாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புரபஷனல் கூரியர் மூலம் தடை செய்யப்பட்ட கஞ்சா போன்ற போதை பொருட்கள் எடுத்துச் செல்வதாக புகார் எழுந்துள்ளது.அதனடிப்படையில் நுங்கம்பாக்கம், கத்தீட்ரல் கார்டன் சாலையில் உள்ள ப்ரொபஷனல் கூரியர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுட்டு தீவிர சோதனை நடத்தினர். மேலும் நான்கு போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், நகை, பணம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 3வது நாளாகா இன்றும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். நுங்கம்பாக்கம், கிண்டி, பிராட்வே, ஆழ்வார்பேட்டை உள்பட சென்னையில் 6 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 30 இடங்களில் நடக்கும் சோதனையில் வரி ஏய்புக்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனையில் கைப்பற்றபட்ட பணம், நகை ஆகியவைகளின் மதிப்பு எவ்வளவு? என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.