அரியலூரில் வங்கி கடன் கட்டமுடியாமல் தவித்த வணிகவரித்துறை உதவியாளர், மேலாளருக்கு கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவர் வேளாண்மை துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் சிவக்குமார் அரியலூரில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சிவக்குமார் வீட்டை திறந்து பார்த்தபோது, அவர் தனது உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவர் அருகில் சிவக்குமார் எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில், தான் ஜெயங்கொண்டம் கிளையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் கல்வி கடனாக ஒரு லட்சத்து 58 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அது வட்டியுடன் கூடிய தொகையாக ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாயாக உயர்ந்து விட்டதாகவும், நேற்று தனது தந்தையார் வங்கிக்கு சென்று 50,000 ரூபாய் பணத்தை செலுத்தி வந்ததாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், தான் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வருவதால், உயிரை மாய்த்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
தனது இறப்பிற்கு பிறகு தனது தந்தையையும் தனது குடும்பத்தாரையும் வங்கி மேலாளர் எந்தவித தொந்தரவும் செய்ய கூடாது என்றும், மேற்கொண்டு தான் கட்ட வேண்டிய ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை எனது சிபிஎஸ் பிடித்தத்திலிருந்து வரும் பணத்தை வைத்து கழித்து கொள்ளவும் எனவும் கடிதத்தில் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பின்னர் இது குறித்து தகவலறிந்து சென்ற ஜெயங்கொண்டம் போலீசார் சிவக்குமார் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி மேலாளருக்கு கடிதம் எழுதி வைத்து வணிகவரித்துறை உதவியாளர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழப்பு எதற்கும் தீர்வாகாது என்பதை முன்னெடுத்து நியூஸ் 7 தமிழ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. எந்த சூழ்நிலையிலும் யாரும் உயிரிழப்பு எண்ணத்தை கையில் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்..
– இரா.நம்பிராஜன்