காமெடியன் சூரி என்பதே எனது அடையாளம் – நடிகர் சூரி உருக்கம்

காமெடியன் சூரி என்பதே எனது அடையாளம் என்றும் அதை எக்காலத்திலும் விடமாட்டேன் என்றும் நடிகர் சூரி உருக்கமாக தெரிவித்துள்ளார்.   நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்…

காமெடியன் சூரி என்பதே எனது அடையாளம் என்றும் அதை எக்காலத்திலும் விடமாட்டேன் என்றும் நடிகர் சூரி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 

நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக தேசிய கொடி ஏற்றி வைத்து உறுப்பினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி கலந்து கொண்டு சங்கத்தின் சார்பாக கொடி ஏற்றி விழாவை சிறப்பித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த நாளில் என்னை விழாவிற்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி என்றும் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக தன்னை அழைத்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்றார்.

 

நாம் இந்த நிமிடம் இந்த நொடி கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் சாதாரணமாக கிடைத்தது அல்ல. இதற்கு பின்னால் பலரது உழைப்பும் தியாகமும் அடங்கி இருக்கிறது. எப்படி ஊரில் எல்லையில் இருக்கும் எல்லைச்சாமி நம்மை பாதுகாக்கிறதோ அதைப்போல நாட்டின் எல்லையில் இன்றளவும் நம்மை பாதுகாக்க உயிரைக் கொடுத்து போராடிக் கொண்டிருக்கின்றனர் ராணுவ வீரர்கள். சமீபத்தில் கூட எனது அருமை தம்பி மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் உயிரிழப்பு படை மூலம் தனது இன்னுயிரை கொடுத்துள்ளார்.

 

அவரது தியாகம் சாதாரண தியாகம் அல்ல அவரது குடும்பத்தாருக்கும் அவரது அப்பா அம்மாவிற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். நீங்கள் வானுயர தலை நிமிர்ந்து நடக்கக் கூடிய அளவிற்கு அருமையான புதல்வனை பெற்றெடுத்துள்ளீர்கள் என்றார். தனக்கும், தன் குடும்பத்தாருக்குமே விருமன் படத்திற்கு டிக்கெட் இல்லை என்றார். இதைவிட ஒரு படத்திற்கு ஆரோக்கியம் என்ன இருக்க முடியும். அந்த அளவிற்கு அமோக வெற்றி படத்திற்கு கிடைத்திருக்கிறது.

ஒரு காமெடி நடிகனாக இருந்து இப்போது இந்த நிலைவரை வந்து இருக்கிறேன் எனில் அதற்கு என்னுடன் பயணித்த அத்தனை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தான்
காரணம். முதன்முதலில் விடுதலை படத்தின் கதையை என்னிடம் இயக்குநர் வெற்றிமாறன் சொன்னதும், இந்த கேரக்டரில் நிறைய சீன்கள் உள்ளன எப்படி இன்னும் இந்த கேரக்டரை வாங்கிவிடலாம் அல்லது அந்த கேரக்டர் நன்றாக இருக்கிறது என ஒவ்வொரு கேரக்டராக என் மனதுக்குள் யோசித்துக் கொண்டிருக்கையில், நீங்க தான் மெயின் லீட் என்றார்.

 

எந்தத் துறை ஆனாலும் சரி முதலில் தன்னை தயார் செய்து கொள் உன் உடலை உன் ஆரோக்கியத்தை நீ முதலில் விரும்பு உன்னை நேசி அதைத்தான் என் அனுபவம் மூலம் கற்றுக் கொண்டேன். மேலும் காமெடியனாக இருந்து சொல்ல வேண்டிய கருத்துக்கள் விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. என்னதான் நான் மெயின் கேரக்டராக நடித்தாலும் அதையும் நான் ஹீரோவாக பார்க்கவில்லை. படத்தின் கேரக்டர் ஆக மட்டுமே பார்க்கிறேன்.

 

காமெடியன் சூரி என்பதே எனது அடையாளம் அதை எக்காலத்திலும் விடமாட்டேன். அதேபோல் எனது கேரக்டர் இப்படி மாறிவிட்டது நான் இத்தனை பேருடன் நடித்துக் கொண்டிருக்கிறேன் என சம்பளத்திலும் நான் எப்போதும் தீர்மானம் செய்ய மாட்டேன். அவர்கள் பார்த்து எனக்கு இப்போது வரை என்ன நியமித்தார்களோ என்ன கொடுக்கிறார்களோ அதைக் கொண்டுதான் என்னுடைய வாழ்க்கை பயணம் சென்று கொண்டிருக்கிறது என்றார். விருமன் படத்தில் நடித்த நடிகை அதிதி சங்கர், மிகப்பெரிய நடிகையாகும் அத்தனை வாய்ப்புகளும் அவருக்கு உள்ளது என்றார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.