கோவையில் வடமாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி கடத்தப்பட்டதாக அவரது தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவையில் வடமாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். இது குறித்து அவரது தந்தை பெண்ணின் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு காவல்துறை மற்றும் ரயில்வே துறைக்கு அந்த புகைப்படத்தை டேக் செய்து தனது மகளை கண்டுபிடித்து தரும்படி உதவி கேட்டுள்ளார். அத்துடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள முதல் தகவல் அறிக்கையையும் பதிவிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, கடத்தல்காரர்கள் கோவை ரயில் நிலையத்திற்கு வருவார்கள் என்று தெரிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு காவல் துறை கோவை மாநகர காவல்துறையை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் கடத்தல் கும்பலை பிடிக்க கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மாநகர காவல்துறை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில்வே காவல்துறையுடன் ஒன்றிணைந்து கடத்தல் கும்பலை நோட்டமிட்டு வருகிறது. காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவில் கோவை ரயில்வே பேருந்து நிலையங்களில் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். உதவி ஆய்வாளர்கள் தலைமையில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் மாநகர பகுதிகளில் போலீசார் வாகன சோதனைகளிலும் ஈடுபட்டுள்ளனர். வடமாநில சிறுமியை கடத்தி சென்றவர்கள் யார் என்பது குறித்து சிசிடிவி கேமிரா பதிவுகளையும் ரயில்வே போலீசார் மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
– இரா.நம்பிராஜன்