கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணையை தொடங்கி உள்ளது.
கோவையில் கடந்த 23ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ.வுக்கு ஒப்படைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து என்.ஐ.ஏ. டி.ஐ.ஜி. வந்தனா தலைமையில் அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு ஆரம்பகட்ட விசாரணை மேற்கொண்டனர். மேலும் கார் வெடிப்பு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் தடயங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் கோவை நகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஒப்படைத்தார்.
இந்த நிலையில், தமிழக போலீசாரிடம் இருந்து ஆவணங்களை பெற்றுக்கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். இன்று காலை என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் இருந்து காரில், கார் வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
கோவை கார் வெடி விபத்து தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் உக்கடம் பகுதியில் ஆய்வு செய்தனர். பின்னர் கோவில் மற்றும் வெளிப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, கூடுதல் தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனை செய்தனர். தொடர்ந்து கார் வந்த இடமான உக்கடத்தில் இருந்து கோட்டைமேடு பகுதி வரையிலும் ஆய்வு செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரின் வீடுகளுக்கும் சென்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைதான 6 பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் கடந்த 7 நாட்கள் காவல்துறை புலன் விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று என்ஐஏ விசாரணையை தொடங்கியுள்ளதால் மேலும் புதிய தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.