கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த முபீன் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ஏராளமான வெடி பொருட்கள், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
மேலும் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாரூதீன், கோவை ஜிம்.எம்.நகர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சர் கான் ஆகிய ஆறு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைதொடர்ந்து, என்ஐஏ காவலில் எடுத்து 6 பேரையும் விசாரணை செய்வதற்காக இன்று காலை புழல் சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.








