கோவை அருகே அரசு அலுவலகத்தில் அனுமதியின்றி பிரதமர் மோடியின் படத்தை வைத்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை அடுத்த பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 22-ஆம் தேதி அன்று பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் வந்த சிலர் அலுவலகத்திற்குள் நுழைந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்துள்ளனர். மேலும் அலுவலகத்திக்குள்ளேயே கோஷங்களை எழுப்பினர். இதனைக் கண்ட பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் அனுமதியின்றி பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைப்பது தவறு எனவும், முகக் கவசம் அணியாமல் அலுவலகத்திற்குள் வரக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் படம் வைக்க வேண்டும் எனவும் பாஜகவினர் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிரதமரின் புகைப்படத்தை அகற்றினால் அதற்கு திமுக தான் காரணமெனவும், பிரதமர் புகைப்படம் அகற்றப்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை பாஸ்கரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டநிலையில் இந்த காட்சிகள் வைரலானது.
இந்நிலையில் பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலத்தில் அத்துமீறி நுழைந்து பிரதமர் புகைப்படத்தை வைத்ததோடு, அரசு அலுவலர்களை பணிசெய்யவிடமால் தடுத்து மிரட்டியதாக, பேரூராட்சி செயல் அலுவலர் தங்கசாமி ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பாஜகவினர் மூன்று பிரிவுகளின் கீழ் பாஸ்கரன் மீது ஆலாந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரனை கைது செய்த காவல் துறையினர், நீதிபதி முன் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.