ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் இதனை தெரிவித்தார்.  மாமல்லபுரத்தில் கடந்த 13…

தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் இதனை தெரிவித்தார். 

மாமல்லபுரத்தில் கடந்த 13 நாட்களாக நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு நிழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4 மாதத்தில் உலகமே வியக்கும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசு நடத்தி முடித்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிற கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு ஏற்ப இந்த சர்வதேச விளையாட்டு நிகழ்வை தமிழ்நாடு அரசு நடத்தி முடித்திருப்பதாகக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  போட்டியில் பங்கேற்ற செஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் செஸ் பயிற்சியாளர்கள் மனதில் 44வது செஸ் ஒலிம்பியாட் என்னென்றும் இனிமையான நினைவாக இருக்கும் என்றார்.

44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை குறுகிய காலத்தில் சிறப்பாக நடத்தி முடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்த தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார். இந்தியாவிற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அதிக பெருமை சேர்த்துள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் ஒரு பண்பாட்டு திருவிழாபோல் நடைபெற்று முடிந்துள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.  இந்த நிகழ்விற்கு பின் புதிய பாய்ச்சலுடன் தமிழ்நாடு அரசு விளையாட்டுத்துறை களம் இறங்க உள்ளதாகவும் சர்வதேச அளவில் விளையாட்டுத்துறை மையமாக தமிழ்நாடு மாறும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தங்கவேட்டை என்கிற பெயரில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும், 25 கோடி ரூபாய்க்கு மேல் வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சர், தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்களான சிலம்பம் போன்றவற்றை சர்வதேச அளவில் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். சென்னையில் வடசென்னை மற்றும் கோபாலபுரத்தில் சர்வதேச குத்துச்சண்டை பயிற்சி அகாடமிகள் அமைக்கப்படும் என்றும், 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.