“வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வர எதிர்க்கட்சியினர் மறுக்கின்றனர்” – முதல்வர் பரப்புரையில் பேச்சு

தேர்தல் பரப்புரையில், மக்கள் பிரச்சினைகளைப் பற்றி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுவதில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். கடலூர் மாவட்டம், புவனகிரியில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது…

தேர்தல் பரப்புரையில், மக்கள் பிரச்சினைகளைப் பற்றி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுவதில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

கடலூர் மாவட்டம், புவனகிரியில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், டெல்டா பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை நிலவியதற்கு திமுகதான் காரணம் என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோதுதான், கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கபினி அணை கட்டப்பட்டது. கபினி அணை கட்டப்படுவது தடுக்கப்பட்டிருந்தால், காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டிருக்காது என கூறினார். தொடர்ந்து விவசாயிகள் மீதோ, ஏழை எளிய மக்கள் மீதோ திமுகவுக்கு எந்த அக்கறையும் கிடையாது என்று விமர்சித்த அவர், காவிரி பிரச்னைக்கு சட்டப் போராட்டத்தின் மூலம் தீர்வு கண்டது எனது தலைமையிலான அதிமுக அரசுதான் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, குறிஞ்சிப்பாடி பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில், குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட அவர், நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் கூறினார். புதிய வேளாண் சட்டங்களால் விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய முடியும் என குறிப்பிட்ட அவர், வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியினர் வர மறுப்பதாக குற்றம்சாட்டினார். ஒரு விவசாயி முதலமைச்சராக இருப்பதால்தான், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிந்ததாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.