அனைவரின் சேவைக்கும் தலைவணங்குகிறேன்: முதலமைச்சர்

நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில்…

நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் காவல் துறையினர், மின்வாரியத்தினர், தூய்மைப் பணியாளர்கள் என பல தரப்பினரும் மும்முறமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தொடர் மழை – அளவுக்கதிகமான நீர்வரத்து காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது துயர் துடைக்கப் பணியாற்றும் காவல்துறையினர், மின்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத் துறையினர் உள்ளிட்ட நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தன்னலம் பாராத உங்களது சேவையாலும் தியாகத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் துயர் துடைக்கப்படுகிறது. இயல்பு நிலை முழுமையாக விரைந்து திரும்ப அனைவரும் சேர்ந்து உழைப்போம். மக்களைக் காப்போம் என்றும், உங்கள் தியாகம் விலைமதிப்பில்லாதது. உங்கள் சேவை மகத்தானது. உங்கள் உள்ளத்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.