புலம்பெயர் தமிழர்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தரவுகள் ஆவணப்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் அயலகத் தமிழர் தினம் 2023 விழா நடைபெற்றது. இரண்டாம் நாளாக அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் மஸ்தான், சேகர்பாபு, பொன்முடி, வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழ் தலைவர்கள் பங்கேற்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: இந்த விழாவில் தமிழர்களாக, தமிழ் உணர்வோடு கூடியிருக்கிறோம். ஏதென்ஸ் நகரத்திற்கு இணையாக பூம்புகார், கொற்கை நகரங்களை கொண்டது தமிழ்நாடு. எந்த நாட்டிற்கு சென்றாலும் காட்டை கழனியாக்கி, அந்த நாட்டை உயர்த்தியவர்கள் தமிழர்கள். பலநிலைகளில் தவிர்க்க முடியாத சக்தியாக தமிழர்கள் திகழ்ந்து வருகிறார்கள். விதை நெல்லாக தமிழை எடுத்துச்சென்று தமிழ் விளையும் நிலங்களை உருவாக்கியவர்கள்.
அயலகத்தமிழர் நல வாரியம் மூலம் கடந்த ஓராண்டில், வெளிநாடுகளில் இறந்த 288 தமிழர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கைக்கு மனிதநேய அடிப்படையில் உதவிக்கரம் நீட்டப்பட்டது. புலம்பெயர் தமிழர்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தரவுகள் ஆவணப்படுத்தப்படும். புலம்பெயர் தமிழர்களின் குழந்தைகள் ஆண்டுக்கு 200 மாணவர்களுக்கு தமிழ்நாட்டிற்கு பண்பாட்டு சுற்றுலா வர ஏற்பாடு, அயல்நாடுகள், வெளிமாநிலங்களில் இறந்த தமிழர்களுக்கு மாத ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அயல்நாடுகளுக்கு செல்வோர் குறித்த தரவுத்தளம் ஏற்படுத்தப்படும். இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
இலங்கை ராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் பேசுகையில், ”உலகெங்கும் இல்லாத வித்தியாசமான நிலை இலங்கை மலையகத் தமிழர்களுக்கு ஏற்பட்டது. வடகிழக்கு தமிழர்கள், மலையகத் தமிழர்கள் 2 விதமான தமிழர்கள் வாழ்கிறோம். மலையகத் தமிழர்களின் பிரச்சனைகள் இலைமறை காயாக 40 வருடங்களாக இருந்தது. இலங்கை சென்று 200 வருடங்களாகியுள்ள நிலையில் பெருமை கொள்ளக்கூடியது எதுவும் இல்லை. மக்களின் மேம்பாட்டிற்காக எங்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலினின் கடைக்கண் பார்வை திரும்ப வேண்டும். எங்கள் பிரச்சனைகளை கோரிக்கையாக இந்திய அரசுக்கு வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.