பிரதமர் மோடியின் போஸ்டரை கிழித்ததில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் கள்ளகுறிச்சியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளகுறிச்சி மாவட்டம், பெத்தராயப்பாளையம் சாலையில் மாவட்ட ஆட்சியரின் குடியிருப்பு வளாகத்தின் எதிரே எலக்டிரிக்கல் கடை உள்ளது. இந்தக் கடையின் உரிமையாளர் தினேஷ். இவரது கடையின் சுவற்றில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அனுமதியின்றி ஒட்டப்பட்ட இந்த போஸ்டரை கடையின் உரிமையாளர் தினேஷ் கிழிக்க முயன்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அந்த பகுதியில் இருந்த பாஜக நிர்வாகி இதனை கேட்டுள்ளார். இதன் பின்னர் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தள்ளு முள்ளாக மாறியது. இந்நிலையில் கடையின் உரிமையாளர் தினேஷ் கீழே தள்ளப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். வாக்குவதம் முற்றிய நிலையில் தகவலறிந்த காவல்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்து வந்து அவர்களோடு சமாதனப் பேச்சில் ஈடுபட்டனர்.
அப்போது காரில் வந்த நபர் கடையின் மீது மதுபாட்டில்களை வீசியுள்ளார், இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் அந்த நபரைத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து உடனடியாக கள்ளக்குறிச்சி காவல்துறை ஆய்வாளர் மற்றும் டிஎஸ்பி அவரை கைது செய்து அவரிடம் விசாரனை செய்து வருகின்றனர். மேலும் இரு தரப்பினரிடையே மீண்டும் மோதல் உருவாகக்கூடிய சூழல் இருப்பதனால் மாவட்ட எஸ்பி பகலவன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் இரண்டு பேருக்கு காயமேற்பட்டு அவர்கள் கள்ளகுறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவரின் குடியிருப்பிற்கு அருகே நடைப்பெற்ற இச்சம்வம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.