பெண்ணை கேலி செய்ததால் இருதரப்பினர் இடையே மோதல் – 6 பேர் மீது போக்சோ வழக்கு

சீர்காழி அருகே மாதானத்தில் கோவிலுக்கு வந்த பெண்ணை கேலி செய்ததால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, போக்சோ சட்டத்தில் ஆறு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த…

சீர்காழி அருகே மாதானத்தில் கோவிலுக்கு வந்த பெண்ணை கேலி செய்ததால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, போக்சோ சட்டத்தில் ஆறு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த மாதானம் கிராமத்தில் அருள்மிகு
முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று மாலை இக்கோவிலில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாயுடன் சுவாமி வழிபாட்டிற்காக வந்துள்ளார்.
அப்பொழுது இளைஞர்கள் சிலர் அப்பெண்னின் மீது தண்ணீரை பீச்சு அடித்து கேலி
செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண்ணின் தாயார் கிராமத்தைச் சேர்ந்த
சிலரிடம் தெரிவித்துள்ளார். இதனை தட்டிக்கேட்டதால் இருதரப்பினர் இடையே
வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக உருவானது. இதில் ஒரு தரப்பைச்
சேர்ந்தவர்களின் இரண்டு கடைகளை மற்றொரு தரப்பினர் இடித்து தரைமட்டம் ஆக்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து இரு தரப்பினரும், ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கி கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த புதுப்பட்டினம் போலீஸார் மாதானம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், சூரியமூர்த்தி, முருகன் உள்ளிட்ட மூவரைக் கைது செய்ததுடன் தலைமறைவான 7 பேரை தேடி வருகின்றனர். மேலும், 17 வயது பெண்ணின் மீது
தண்ணீரை ஊற்றி கேலி செய்ததாக மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஆறு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.