10% இடஒதுக்கீடு: தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் எதிர்ப்பு

10 சதவிகித இடஒதுக்கீட்டை 3 நீதிபதிகள் உறுதிசெய்த நிலையில், தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்…

10 சதவிகித இடஒதுக்கீட்டை 3 நீதிபதிகள் உறுதிசெய்த நிலையில், தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இவ்வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்திர பட், பீலா திரிவேதி, ஜே.பி.பர்திவாலா அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்தனர்.

எனினும் மற்ற நீதிபதிகளில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார் நீதிபதி ரவீந்திர பட். மற்ற நீதிபதிகளின் தீர்ப்பிலிருந்து மாறுபடுகிறேன் என்ற அவர், 10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும், “தற்போதைய 10% இடஒதுக்கீடு என்பது சமத்துவம் என்ற அரசியல் சாசனத்தின் இதயத்தையே தாக்குவது போல் உள்ளது. இந்த சட்டத் திருத்தம் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கியுள்ள இடஒதுக்கீடு அவர்களை சிறப்பான உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்குகிறது” என்று குறிப்பிட்டார்.

அத்துடன், ”இட ஒதுக்கீடு 50% மீற அனுமதிப்பது என்பது மேலும் மீறல்களுக்கு வழி வகுக்கும். தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீட்டு என்பது அங்குள்ள எஸ்சி, எஸ்.டி மக்கள் தொகையை கணக்கில் கொண்டு பின்பற்றுவது. எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினரை புறந்தள்ளி ஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்தில் அனுமதிக்காத ஒன்று. 10% இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் சமூக பின் தங்கிய வகுப்பினருக்கு எதிராக உள்ளது.

இட ஒதுக்கீடு என்பது சமூகத்தில் பின்தங்கிய உரிய அங்கீகாரம் இல்ஙாமவர்களுக்கானது என்ற நிலை என்பதை விடுத்து பொருளாதார அடிப்படையிலான நோக்கத்திற்கு மாற்றுகிறது” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்புடன் ஒத்துப்போகிறேன், இந்த சட்டத் திருத்தம் செல்லாது என்பதே எனது தீர்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.