கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்த நிதியுதவி குழந்தைகளுக்கான பிரதமரின் நிவாரண நிதியுதவி திட்டத்திலிருந்து வழங்கப்படும் என்று அவர் கூறினார். காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழச்சியில் பயனாளிகளுக்கு பாஸ்புக்குகளையும் அவர் வழங்கினார். அத்துடன், ரூ.5 லட்சத்துக்கான ஆயுஷ்மான் பாரத் யோஜனா சுகாதார காப்பீட்டு அட்டைகளையும் அவர் குழந்தைகளுக்கு அளித்தார்.
கொரேனாவுக்கு தங்களது பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளின் உயர்கல்விக்கும், தொழில்முறை கல்விக்கும் உதவும் நோக்கத்தில் மாதந்தோறும் ரூ.4,000 நிதியுதவி அளிக்கப்படவுள்ளது. ஆயுஷ்மான் சுகாதார அட்டையை வைத்து, ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவினங்கள் அந்தக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும். குழந்தைகளுக்கான பிரதமர் நிவாரண உதவி திட்டம், கடந்த ஆண்டு மே 29ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2020ம் ஆண்டு மார்ச் 11 முதல் கடந்த பிப்ரவரி 28ம் தேதி வரை கொரோனாவுக்கு பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பயனடையும் குழந்தைகள் 23 வயதை பூர்த்தி செய்திருக்கும்போது சுகாதார காப்பீடு மற்றும் உதவித்தொகை உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான ஆதரவு அரசு சார்பில் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.








