அட்சய திருதியையொட்டி குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலெட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றம், என குறிப்பிட்டுள்ளார். குழந்தை திருமணத்தை முன்னின்று நடத்துபவர்கள், ஆதரிப்பவர்கள் மற்றும் அதனை மறைப்பவர்களுக்கு, 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும், என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அட்சய திருதியை முன்னிட்டு, குழந்தை திருமணங்கள் அதிகளவு நடைபெறுவதாக கூறிய ஆட்சியர் சீத்தாலெட்சுமி, குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை அறிந்தால், பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.







