வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் – இலங்கை வசம் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல்!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

 

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு, மத்திய அரசு வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதை ஒரு முக்கியமான பிரச்சினையாகக் கருதி, வெளியுறவுத் துறை உடனடியாக இதில் தலையிட வேண்டும் என்று முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடிப்பதற்கு தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கடந்த சில ஆண்டுகளாக, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைபிடிப்பது ஒரு தொடர் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இந்தச் சூழலில், முதலமைச்சரின் இந்தக் கடிதம், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை மீனவர்களும்,தமிழ்நாட்டு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.