தமிழகத்தில் அதிக அளவில் பரவியுள்ள கஞ்சா விற்பனையைத் தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்ட மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றினார். அதைத்தொடர்ந்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், தமிழகத்தில் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு கஞ்சா விற்பனை பரவியுள்ளது. இதனை முதலமைச்சர்கள் உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அமைச்சர் மீது நடத்திய தாக்குதல் குறித்த கேள்விக்கு, யாராக இருந்தாலும் இது போன்ற அநாகரிகமான செயலில் ஈடுபட கூடாது இதனை தேமுதிக கண்டிக்கிறது.
முதலமைச்சர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்று தெரிவிக்கிறார். ஆனால் பட்டப்பகலில் வங்கியில் கொள்ளை நடக்கிறது. செப்டம்பர் மாதத்தில் தேமுதிக உட்கட்சி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேமுதிக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும். முறையான அறிவிப்பு அறிவிக்கப்படும் என்றார்.
-ம.பவித்ரா








