2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சரை சந்தித்து பேசினார்.
டெல்லியில் உள்ள அமித்ஷா இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின்போது அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் முதலமைச்சரின் செயலாளரும் உடன் இருந்தனர். நாளை காலை, 10.30 மணி அளவில் பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார். அப்போது, சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டு வரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவும், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவும் பிரதமருக்கு, முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுக்க உள்ளார்.
மேலும், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, மற்றும் புயல் பாதிப்புகளை சீர்செய்ய தேவையான நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும், பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார். முன்னதாக, டெல்லி விமான நிலையத்தில், தமிழக முதலமைச்சரை, நவநீதகிருஷ்ணன், கே.பி.முனுசாமி, முகமது ஜான் மற்றும் அதிமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் வரவேற்றனர்.







