டவ் தே புயலால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரணப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்
அரபி கடலில் உருவாகி உள்ள டவ் தே புயல் வரும் 18 ஆம் தேதி குஜராத்தில் கரையைக் கடக்க உள்ளது. புயலின் தாக்கத்தால் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், டவ் தே புயல் மற்றும் கனமழையால் தமிழகத்தில் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் வருவாய் பேரிடர் மேலாண்மை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் பங்கேற்றனர்.
புயல் நிலவரம் குறித்தும், தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் ஆலோசனையின் போது எடுத்துக் கூறினர். பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்தும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். நிவாரண முகாம்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீன்பிடிப் படகுகளிள், 162 மீன்பிடிப் படகுகள் கரைக்குத் திரும்பியுள்ள நிலையில், எஞ்சிய படகுகளும் கரை திரும்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.







