திருவள்ளூர் மாவட்ட அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை திரும்பும் வழியில் திருவள்ளூர் மாவட்டம் வடகரை அரசு ஆண்கள் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், “ஆய்வின்போது மாணவ, மாணவியர் சுகாதாரமான, பாதுகாப்பான முறையில் கல்வி பயிலத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினேன். பள்ளியில் சுற்றுப்புற சுகாதாரம், குடிநீர் வசதி, தூய்மையான கழிவறைகள் ஆகியவற்றைச் சரிவர பராமரிப்பதை உறுதி செய்திட வேண்டுமென்று அங்கிருந்த ஆசிரியர்களுக்கு மற்றும் அலுவலர்களுக்கு நான் அறிவுறுத்தினேன்” என்று தெரிவித்தார்.
கல்வி பயில்வோருக்கு நல்ல தரமான உணவு தயாரித்து, உரிய நேரத்தில் வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தியதாக குறிப்பிட்ட முதலமைச்சர், “கட்சி சார்பற்ற முறையில், அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் அவரவர்களது பகுதிகளிலுள்ள பள்ளிகளை அவ்வப்போது பார்வையிட்டு, மேற்குறிப்பிட்ட அடிப்படை வசதிகளை குறிப்பாக ஆய்வு செய்து, அவற்றில் ஏதேனும் குறைபாடுகளைக் கண்டறிந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கும், துறை அலுவலர்களுக்கும் தெரிவித்து, அவற்றைக் களைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.
மேலும், “மாணவச் செல்வங்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில், பள்ளி வளாகங்களில் உள்ள கழிவறைத் தொட்டிகள் மூடியிருப்பதையும், அதேபோன்று, குடிநீர்த் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு, சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதையும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் அவ்வப்போது கண்காணித்து வர வேண்டும்” என்றும் கூறினார்.