கல்லறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் மீது மரம் விழுந்து சுருண்டு கிடந்துள்ளார். அந்த இளைஞர் செத்தே போய்விட்டார் என்று பலரும் நினைத்திருந்த நேரத்தில்தான், மயங்கி கிடந்த உதயகுமாரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி எவ்வித தயக்கம் இன்றி அலேக்காக தூக்கி தனது தோளில் சுமந்துக்கொண்டு வேகமாக வெளியே வந்தார்.
பின்னர் அவரை, ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ஒருவர் உயிருக்கு போராடும் நேரத்தில் மற்ற போலீஸ்காரர்களை உதவிக்கு அழைக்காமல் நேரிடையாக களப்பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் செயலை போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், மயங்கி விழுந்த நபரை தோளில் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்த பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
பாராட்டு தெரிவித்த பின் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், “முறிந்து விழுந்த மரத்தின் கீழ் சுயநினைவின்றி கிடந்த உதயா என்பவரை துணிவுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உயிர்பிழைக்க வைத்த பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் அர்பணிப்பிற்கும், அவரது கடமை உணர்விற்கும் மகத்தான பணிக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு ஏற்ப கம்பீரமாகவும் கருணை உள்ளத்துடன் தாங்கள் மேற்கொண்ட பணி காவல்துறையில் உள்ள அனைவருக்கு பெருமையையும், ஊக்கத்தையும் அளிக்கும். சட்டத்தையும் மக்களையும் காக்கும் பணி தொடரட்டும்”. என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.