நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.
மாணவர்கள் கல்வி நிலையத்தை விட்டு வெளியேறும் போதே வேலை கிடைக்கவும், இடைநின்ற மாணவர்களின் திறனை வளர்த்து, வாழ்வாதாரம் சிறந்து விளங்கவும், மாணவர்களை தொழில் முனைவோராக்கவும் என எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.
மாணவர்கள் கல்வி நிலையத்தை விட்டு வெளியேறும் போதே வேலை கிடைக்கவும், இடைநின்ற மாணவர்களின் திறனை வளர்த்து, வாழ்வாதாரம் சிறந்து விளங்கவும், மாணவர்களை தொழில் முனைவோராக்கவும் என எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.
அதில் மாணவர்கள் என்ன உயர்கல்வி படிப்புகள் என்னென்ன படிக்கலாம்? மாணவர்களுக்கு எவ்வாறு வழிகாட்டுதல்கள் வழங்கலாம்? மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் என்னென்ன? வேலைவாய்ப்பு உலகை புரிந்துகொள்ளுதல் எவ்வாறு?, போட்டித்தேர்வுக்கு தயாராவது எவ்வாறு? என்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.
இதையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள், அவரவர் மாவட்டங்களில் பயிற்சி வகுப்பு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி வழங்க ஏதுவாக, அவர்களை தயார்படுத்தும் நிகழ்வில் ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார். இவ்விழாவில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும், மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.
உயர்கல்வித்துறை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், கல்லூரி இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லூரி கனவு நிகழ்ச்சியானது அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 2 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.








