இடஒதுக்கீடு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து, அனைத்து
பல்கலைக்கழகங்களிலும் தமிழக அரசு சார்பாக ஆய்வு செய்யப்படும் என்று
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறினார். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், அதனைக் கருத்தில்கொண்டு, கூடுதலாக ஐந்து நாட்கள் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொன்முடி தெரிவித்தார்.
எல்லாம் பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கைக்கான விதிமுறைகளை முறையாக பின்பற்ற அரசாணை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இடஒதுக்கீடு நடைமுறையை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இடஒதுக்கீடு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய, தமிழ்நாடு அரசு சார்பாக சுப.வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நேரடியாக சென்று சுப.வீரபாண்டியன்
மேற்பார்வையிடுவார் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், குறிப்பாக கிராமப்புற
மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் எனக் கூறிய அவர், தனியார் நீட் பயிற்சி பள்ளிகள் பயன்பெறுவதற்காகதான், நீட் தேர்வு
நடத்தப்படுவதாகக் குற்றம்சாட்டினார். ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஒருவர் நீட் பயிற்சி பள்ளி நடத்தி ஏராளமான பணம் சம்பாதித்துள்ளார் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விமர்சித்தார்.







