பிரதமரைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரிடம் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அவற்றை தற்போது பார்ப்போம்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக தனி விமான மூலம் இன்று பிற்பகல் சென்னை வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்,ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா, அஷ்வினி வைஷ்ணவ், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து பழைய விமான நிலையத்தில் வரவேற்பை முடித்துக் கொண்டு கார் மூலமாக சென்னை விமான நிலையத்தில் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்திற்கு பிரதமர் மோடி வந்தார். அங்கு புதிய விமான நிலைய முனையம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த பிரதமர், புதிய முனையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , ஆளுநர் ரவி , விமானப் போக்குவத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடியுடன் புதிய பன்னாட்டு முனையத்தை பார்வையிட்டனர்.
இதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அடையாறு கடற்படை தளத்திற்கு சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தார்.
பின்னர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சென்னை-கோவை இடையே முதன்முறையாக இயக்கப்படும் வந்தே பாரத் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக வந்தே பாரத் ரயிலின் உள்ளே சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். ரயிலில் உள்ள வசதிகள் குறித்து அதில் பயணம் செய்யவிருந்த பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதன் பின்னர் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். வந்தே பாரத் ரயில் பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவை புறப்பட்டு சென்றது.
அப்போது பிரதமரைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமரிடம் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அவற்றை தற்போது பார்ப்போம்.
* சென்னை மெட்ரோ இரயில் திட்டம்-கட்டம்-2 பங்களிப்பு மற்றும், விமான நிலைய விரிவாக்கத்திற்கான பாதுகாப்புத்துறை நிலங்களை இலவசமாக வழங்குதல்,
* காலணி உற்பத்திக்கான புதிய உற்பத்தி சார்ந்த ஊக்கச் சலுகைத் திட்டம் (PLI)
*பி.எம். மித்ரா பூங்காவின் முதன்மை மேம்பாட்டாளராக சிப்காட்டினை நியமித்தல்,
*தமிழ்நாட்டில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தைச் சென்னையில் அமைத்தல்,
*ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளைத் தமிழ்நாட்டில் நடத்துதல்,
*பாக் வளைகுடாப் பகுதிகளில் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்தல்,
*தமிழ்நாட்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகளை நடத்துதல்,
*இராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை புதிய அகல இரயில் பாதை அமைக்கும் திட்டத்தைக் கைவிடுதல்,
*பழங்குடியினர் சாதி பட்டியலில் ‘ன் (N)’, ‘க(KA)’ என முடிவடையும் பெயர்களை “ர் (R)” விகுதியுடன் மாற்றக் கோருதல்,
*கடலோரக் காற்றாலை மின்னுற்பத்தியில் பெரும்பங்கைத் தமிழ்நாட்டிற்கு வழங்குதல்,
*விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தைச் சென்னையில் அமைத்தல்,
*சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் உள்ள முரண்பாடுகளைக் களைதல்,
*இலங்கைத் தமிழர்கள் விவகாரம் & ஈமத் தமிழர்களுக்குச் சமமான குடிமுறை மற்றும் அரசியல் உரிமைகள் அளித்திட இலங்கை அரசை வற்புறுத்துதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளைப் பிரதமரைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்வைத்துள்ளார்.