சத்தீஷ்கர் எக்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக இதில் பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
மகாராஷ்டிராவிலிருந்து நாக்பூர் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சத்தீஷ்கரின் தோங்கர்கார் பகுதியில் திடீரென தடம் புரண்டது. 18239 என்ற எண் கொண்ட ஷிவ்நாத் எக்ஸ்பிரஸ் ரயில் கோண்டியா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இத்வாரி ரயில் நிலையம் நோக்கி சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது. இதில் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.
இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தென்கிழக்கு மத்திய ரயில்வே தெரிவித்து உள்ளது. மேலும், ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டதாகவும், எனவே, பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும், பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர் எனவும் ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, தடம் புரண்ட ரயிலை மீண்டும் இயக்குவதற்கான பணிகளை ரயில்வே தொழில் நுட்ப குழு மேற்கொணண்டது. இதற்காக மருத்துவ குழு ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. 2 மணிநேர பணிக்கு பின்பு, தடம் புரண்ட ரயில் பெட்டிகள் தனியாக கொண்டு செல்லப்பட்டன. அதில் இருந்த பயணிகள் படுக்கை வசதி (Sleeper Coach) கொண்ட பெட்டிக்கு இடம் மாற்றப்பட்டனர். அதன்பின் ரெயில் புறப்பட்டு சென்றது.
இதேபோன்று, ஒடிசாவின் புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரெயிலின் 5 பெட்டிகள் நேற்றிரவு தடம் புரண்டன. இதனால், அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. கடந்த வாரம், சத்தீஷ்கரில் இருந்து ராஜஸ்தான் நோக்கி சென்ற பகத் கி கோட்டி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயிலின் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 2 பேர் லேசான காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.







