காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு சத்தீஸ்கரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டெல்லியில் பாஜக தேசியச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. வகுக்கப்போகும் வியூகம் என்ன? சொல்லப் போகும் செய்தி என்ன? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்…
சட்டப்பேரவை தேர்தல்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திரிபுரா, நாகலாந்து, மேகலாயா மாநிலங்களைத் தேர்தல்களைத் தொடர்ந்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அடுத்தடுத்து சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கும் அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளை தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தொடங்கி விட்டன.
கூட்டணி அமைப்பு, மக்கள் சந்திப்பு, பிரச்சார வியூகம், மக்கள் சந்திப்பு திட்டங்கள் என வியூகங்களை வகுத்து வருகின்றன. குறிப்பாக ஆளும் பாஜகவும் ஆண்ட காங்கிரஸ் கட்சியும் தங்களின் செயல் திட்டத்தை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் மாநாடு
குறிப்பாக, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கூடியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ச்சுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல்காந்தி மற்றும் உயர்மட்டத் தலைவர்கள் அரசியல், பொருளாதாரம், இளைஞர் நலம், வேலைவாய்ப்பு, சமூக நீதி உள்ளிட்டவை குறித்தெல்லாம் விவாதித்துள்ளனர்.
குறிப்பாக, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை என்கிற இந்திய ஒற்றுமைப் பயணத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பையடுத்து, வடக்கில் உள்ள பிற மாநிலங்களில் இந்த பயணத்தை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பத்தாண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்கிற பிகார் முதலமைச்சர் நித்திஷ்குமார் உள்ளிட்டோரின் கருத்து குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்துக்கட்சிகளையும் ஒரு புள்ளியில் இணைக்கும் செயல்திட்டம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களின் வழியாக இந்தியாவை இணைக்கவும். மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கவும் மாநிலங்களின் பிரச்னைகள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
பாஜக தீவிரம்
மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரஸ் கட்சியின் முயற்சிகள் ஒரு புறம் இருக்க, அதைத் தடுக்கவும் ஆட்சியைத் தக்க வைக்கவும் பாரதிய ஜனதா கட்சி களமிறங்கி விட்டது. அதற்காக மாநிலவாரியான செயல் திட்டங்களை ஏற்கனவே வகுத்து விட்டது. அதை முடுக்கி விடும் வகையில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்று, செயல்திட்டங்களை செம்மையாக்க உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, மாநிலங்களில் பலமாக உள்ள மாநிலக் கட்சிகளை தங்கள் அணியில் சேர்ப்பது. முரண்டு பிடிக்கும் கட்சிகளை தங்கள் வழிக்கு கொண்டு வருவது. கட்சியின் வாக்கு வங்கியைப் பெருக்குவது மற்றும் நீண்ட கால செயல்திட்டங்கள் விவாதிக்கப்பட உள்ளன என்கிறார்கள். முதலில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி, அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலிலும் வெற்றி என்கிற இலக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சத்தீஸ்கர் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, ’இந்திய ஒற்றுமைப் பயணம் கட்சிக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதை எனது இன்னிங்கிஸின் நிறைவுப் பகுதியாக கருதுகிறேன்’. என்றார்.
அக்கட்சியின் தலைவர் கார்கே பேசுகையில், ’பாஜகவை வீழ்த்த, ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. இதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம்.’ என்றது கவனக்கதக்கதாக உள்ளது. இதுதான் காங்கிரஸ் மாநாட்டு செய்தியாகவும் இருக்கும் என்கிறார்கள்.
இதன் மூலம் பிரிந்து கிடக்கும் எதிர்க்கட்சிகளை நோக்கி கூட்டணிக்கு கை நீட்டியுள்ளது காங்கிரஸ். தங்கள் மாநிலங்களில் வலுவாக உள்ள மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் கரம் கோர்ப்பார்களா…? ஒன்றுபடுமா எதிர்க்கட்சிகள்…? எதிர்க்கட்சிகள் ஒன்று பட்டாலும் வென்று காட்டுமா பாஜக… ?