பூட்டப்பட்ட வீட்டுக்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த கணவரின் சடலத்துடன் 2 தினங்களாக மனைவி தங்கியிருந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை புரசைவாக்கம் வைக்கோகாரன் தெருவில் வசித்து வந்தவர் அசோக் பாபு (53). இவரது இரண்டு மகன்களும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். திருமணமான இவரது மகள் தனது கணவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்,நிலையில் மகள் ஆர்த்தி கடந்த இரு தினங்களாக தனது அப்பாவான அசோக் பாபுவுக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார். ஆனால், அவர் போனை எடுக்காததால் இன்று போலீஸாருடன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீடு உள்பக்கமாக தாழிட்ட நிலையில் அசோக் பாபு நிர்வாணமாக இறந்து கிடந்துள்ளார். அருகில் அசோக் பாபுவின் மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி பத்மினி (48) இறந்துபோன அசோக் பாபுவையே பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த வேப்பேரி போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டு இரு தினங்களாக சடலத்துடன் வாழ்ந்து வந்த அசோக் பாபுவின் மனைவி பத்மினியை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த மரணம் தொடர்பாக வேப்பேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.