சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில், விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த சம்பவத்தில், அவர் போலீசாரால் கைது செய்து அழைத்து வரப்பட்டது முதல் தற்போது வரை என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்….
கடந்த 18ஆம் தேதி இரவு 11 மணி கெல்லீஸ் சிக்னலில் ஆட்டோவில் சென்ற ஓட்டுநர் பிரபு, விக்னேஷ், சுரேஷ் ஆகியோர் மீது தலைமைச் செயலக காலனி காவல்நிலைய காவலர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இரவு 11.30 மணிக்கு விக்னேஷின் முதலாளி ரஞ்சித் உள்ளிட்ட 5 பேர் கெல்லீஸ் சிக்னலுக்கு வந்து விக்னேஷ் தன்னிடம் பணி செய்வதை உறுதி செய்தபோதும் காவலர்கள் தாக்குதலைத் தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
19ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு விக்னேஷ், சுரேஷ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பிரபு ஆகியோர் அயனாவரம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதிகாலை 3 மணிக்கு ஆட்டோ ஓட்டுநர் பிரபு அயனாவரம் காவல்நிலையத்தில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அன்று காலை அயனாவரம் காவல் நிலையத்தில் இருந்து தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்கு விக்னேஷ், சுரேஷ் ஆகியோர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதலில் விக்னேஷ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த சுரேஷை காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ரிமாண்ட் உத்தரவு பெற்று புழல் சிறையில் அடைத்துள்ளனர். காலை 10.30 மணிக்கு ஆட்டோ ஓட்டுநர் பிரபு அளித்த தகவலின்படி, சுரேஷின் தாயார் கற்பகாம்பாள் அயனாவரம் காவல்நிலையம் சென்றுள்ளார். அங்கு அவர் இல்லை என காவலர்கள் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் பட்டினம்பாக்கத்தில் உள்ள விக்னேஷின் அண்ணன் வினோத்தை பட்டினம்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆயிரம் விளக்கு காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் விக்னேஷின் தம்பிகளிடம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை ஈமச்சடங்கிற்கு பயன்படுத்துமாறு வழங்கியுள்ளார்.
20ம் தேதி காலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் விக்னேஷின் உடலை பார்க்க அவரது அண்ணன் வினோத் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் அப்போது நீதித்துறை நடுவர் உடன் இருக்கிறார். அன்று மாலை விக்னேஷின் உடலை மற்றவர்கள் பார்க்க விடாமல் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 150 காவலர்கள் சுற்றியிருக்க அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
21ம் தேதி விக்னேஷ் மரண வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலக காலனி காவல்நிலைய காவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.26ஆம் தேதி சுரேஷின் தாயார் தனது மகனை புழல் சிறையில் சந்திக்க முயற்சி செய்தபோது அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
29ஆம் தேதி காவலர்களால் கொடுக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்க சென்னை பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது.சம்மன் அனுப்பி வாக்குமூலம் பெற்ற பின் பணத்தை பெறுவதாக நீதிபதி கூறியுள்ளார். அன்று பிற்பகல் தமிழ்நாடு அரசு அறிவித்த இழப்பீட்டு தொகையை விக்னேஷின் சகோதரர்கள் பெற்றுக் கொள்கின்றன







