சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது!

திருநெல்வேலி – சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை  நாளை தொடங்கவுள்ள நிலையில் அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.  தெற்கு ரெயில்வேயில் சென்னை – மைசூர், சென்னை – கோவை, திருவனந்தபுரம் – காசர்கோடு…

திருநெல்வேலி – சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை  நாளை தொடங்கவுள்ள நிலையில் அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. 

தெற்கு ரெயில்வேயில் சென்னை – மைசூர், சென்னை – கோவை, திருவனந்தபுரம் – காசர்கோடு இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. அதன்படி, நெல்லை-சென்னை இடையே நாளை முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் ரெயில் சேவையை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடந்து வருகிறது.

இந்த ரயில், சென்னை எழும்பூருக்கு அடுத்தபடியாக 160 கி.மீ தூரம் தள்ளி உள்ள விழுப்புரத்திலும், அதற்கு அடுத்தப்படியாக 160 கி.மீ தூரமுள்ள திருச்சியிலும் தான் நிற்கும். அதேபோல, அதற்கு அடுத்து 105 கி.மீ தூரமுள்ள திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகரில் நிற்கும். ஆனால், சென்னை தாம்பரத்தில் நெல்லை வந்தே பாரத் ரயில் நிற்காது என்பது சென்னை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் பயணிகள் தாம்பரத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில்,  தாம்பரத்திலும் நிற்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.

அதன்படி, சென்னை டூ நெல்லை சென்றடைய 10 மணி முதல் 12 மணி நேரம் ஆகும். ஆனால், நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் ஏழு அரை மணி நேரத்தில் செல்லும்.

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயிலில் ஏ.சி.சேர்கார் பெட்டியில் பயணம் செய்ய கட்டணமாக ரூ.1,620 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ஒருவருக்கு 3,025 ரூபாய். மேலும், இந்த ரயிலில் பயணிகளுக்கு 2 வேளை உணவு வழங்கப்படும். மதியம் மற்றும் இரவு உணவுடன் டீ, காபி, சூப், பிஸ்கட் போன்றவை வழங்கப்படும். இந்த ரயில் பேண்ட்ரி கார் வசதி  இல்லை என்றாலும் ஐஆர்சிடிசி மூலம் உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது.

உணவிற்கும் சேர்த்துதான் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண சேர்கார் பயணிகளுக்கு உணவிற்காக 300 ரூபாயும், எக்சிகியூட்டிவு சேர்கார் பயணிகளுக்கு 370 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது. வரும் 25ஆம் தேதி முதல் பயணிக்க, ஆன்லைன் அல்லது முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.