பொது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து நாளை காலை 6.30 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“மெட்ரோ ரயில் சேவைகள் முதல் கட்டமாக நாளை காலை 6.30 மணிமுதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும். பின்னர் தேவையின் அடிப்படையில் நேரம் மாற்றம் செய்யப்படும். தமிழக அரசின் அறிவுறுத்தல் படி மெட்ரோ ரயில்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
நீல வழித்தடத்தில் விமானநிலையம்-விம்கோநகர் இடையே ரயில்கள் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில் பரங்கி மலை மெட்ரோ-புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படும். இரண்டு வழித்தடத்திலும் நாளை முதல் நெரிசல் நேரங்களில் அதாவது காலை 9 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை ஐந்து நிமிட இடைவெளிகளில் ரயில்கள் இயக்கப்படும். நெரிசல் இல்லாத வழக்கமான நேரங்களில் 10 நிமிட இடைவெளிகளில் ரயில்கள் இயக்கப்படும்.
அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில்கள் அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகள் வருகை, வெளியேறும் பாதைகளில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
மெட்ரோ ரயில்கள், மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளில் , காத்திருக்கும் இடங்களில் தனிமனித இடைவெளியை குறிக்கும் குறியீடுகளை பயணிகள் பின்பற்ற வேண்டும். மெட்ரோ ரயிலில் பயணிப்போர், ரயில் நிலையங்களில் நுழைவதற்கும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.”
இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







