சென்னையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் டிஜிபி-யின்
மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல் துணை ஆணையர் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், சென்னை நந்தம்பாக்கத்தில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் நேற்று (அக்.24) தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நைஜீரியாவின் ஜான் எஸி, மெக்கலன் மற்றும் அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படியுங்கள் : “உங்கள் வருகைக்காக இதய வாசலை திறந்து காத்திருப்பேன்” | தவெக மாநாடு குறித்து தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு!

அவர்களிடமிருந்து 2.5 கிராம் மெத்தம்பெட்டமைன், ரூ. 1 லட்சம் ரொக்கம், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அருண் என்பவர் முன்னாள் டி.ஜி.பி ரவீந்திரநாத் மகன் என்பது தெரியவந்துள்ளது.
சென்னையில், போதைப்பொருள் விற்பனை தொடர்பாக கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது போதைப்பொருள் கடத்தல் வழககில் முன்னாள் டி.ஜி.பி மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர் உள்ளதா? இவர்களுக்கு போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







