சென்னை விமான நிலையத்தில் அதிநவீன 6 அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் 4ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதிதாக ஆறு அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் ரூ. 250 கோடி செலவில் இரண்டரை லட்சம் சதுர அடியில் அதி நவீன முறையில் வடிவமைத்து கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த கார் பார்க்கிங்கில் 2,150 வாகனங்கள் ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். மின்சார வாகனங்களும் இங்கு நிறுத்தலாம். மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் ஏற்றுவதற்கான கருவிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த புதிய கார் பார்க்கிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பே செயல்பாட்டுக்கு வரும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் அதில் பல்வேறு நிர்வாக காரணங்களால் இந்த கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் வருகின்ற டிசம்பர் 4ந் தேதி அதிகாலை 00.01 மணியில் இருந்து இந்த கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வரும் என விமான நிலைய ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த புதிய அதிநவீன கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வருவதை ஒட்டி தற்போது பயன்பாட்டில் இருக்கும் தரைதள பழைய கார் பார்க்கிங் வரும் 3ந் தேதி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் மூடப்படுகிறது.
அதன் பின் பழைய கார் பார்க்கிங்கில் கார்கள் நிறுத்த அனுமதி இல்லை. உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்களுக்கு வரும் அனைத்து வாகனங்களும் புதிய 6 அடுக்கு மல்டி லெவல் பார்க்கிங்கில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் விமான நிலைய ஆணையம் அறிவித்து உள்ளது.
மேலும் புதிய கார் பார்க்கிங்கில் கட்டணம் விகிதங்களையும் அறிவித்தது. கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை நிறுத்துவதற்கு ரூ. 20 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதற்கு மேல் 2 மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூ. 25 ஆகும்.
தற்போதைய புதிய மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் இரு சக்கர வாகனங்கள் 30 நிமிடங்கள் வரை நிறுத்துவதற்கு ரூ. 20 தான். ஆனால் 2 மணி நேரம் வரை நிறுத்தினால் ரூ. 30 ஆகும். மேலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ரூ.5 என உயர்ந்து இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தி இருந்தால் கட்டணம் ரூ. 90 ஆகும்.
கார்களுக்கு 30 நிமிடத்திற்கு தற்போது ரூ. 40 வசூலிக்கப்படுகிறது. புதிய கார் பார்க்கிங்கில் 30 நிமிடங்களுக்கு ரூ. 75 ஆகும். ஏற்கனவே உள்ள பழைய கார் பார்க்கிங்கில் 2 மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூ.100 என இருந்த கட்டணம் புதிய கார் பார்க்கிங்கில் 2 மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூ. 150 ஆகும். மேலும் ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கு ரூ.50 என உயர்ந்து 24 மணி நேரம் வரை கார்கள் நிறுத்தி இருந்தால் ரூ. 500 கட்டணமாக வசூலிக்கப்படும்.