30 ஆண்டுகளுக்குப்பின் கீபோர்டில் மாற்றம் – மைக்ரோசாப்ட் அதிரடி!

30 ஆண்டுகளில் இல்லாத மாற்றமாக விண்டோஸ் கீபோர்டில் ‘கோபைலட்’ ஏஐ பயன்படுத்துவதற்கான பட்டனை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் 1994-ம் ஆண்டில் விண்டோஸ் மெனு உபயோகத்துக்கான ஸ்டார்ட் பட்டன்…

30 ஆண்டுகளில் இல்லாத மாற்றமாக விண்டோஸ் கீபோர்டில் ‘கோபைலட்’ ஏஐ பயன்படுத்துவதற்கான பட்டனை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் 1994-ம் ஆண்டில் விண்டோஸ் மெனு உபயோகத்துக்கான ஸ்டார்ட் பட்டன் ஒன்றை கீ போர்டில் கடைசியாக புகுத்தியது. பின்னர் 30 ஆண்டுகள் இடைவெளியில், அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்துக்கு ஈடுகொடுக்கும் வகையிலான ஏஐ பட்டன் ஒன்றை, தனது கீ போர்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

மைக்ரோசாப்டுடன் இணைந்து செயல்படும் மடிகணினி மற்றும் கணினி உற்பத்தியாளர்கள் இந்த புதிய பட்டனை அறிமுகப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த புதிய பட்டன் மைக்ரோசாப்டின் புதிய செய்யறிவு தொழில்நுட்பமான ‘கோபைலட்’டை பயன்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்பேஸ் பட்டனின் வலதுபுறம் இந்த ஏஐ பட்டன் இடம்பெற இருக்கிறது. வெறும் இணையவழிச் சேவைகள் மட்டும் இல்லாமல் உள்பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்த கோபைலட் செயல்படும் எனக் கூறப்படுகிறது.

இது சாட்பாட் உட்பட ஏஐ தொடர்பான அனைத்து பயன்பாடுகளுக்கும் திறப்பாக அமையும். இந்த வசதி விண்டோஸ் 11 பதிப்புகளில் கிடைக்கும். மைக்ரோசாப்டின் ஹார்ட்வேர் துணை நிறுவனங்கள் இதற்கான தயாரிப்புகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளன. மைக்ரோசாப்ட் பயன்பாட்டாளர்கள் தங்களது கம்ப்யூட்டரை அப்கிரேட் செய்துகொள்வது அவசியம் என கூறப்படுகிறது. புதிதாக கம்ப்யூட்டர் வாங்க விரும்புவோர், இந்த மாற்றங்களை உள்ளடக்கிய புதிய தலைமுறை வருகைக்காக சற்று காத்திருப்பது நல்லது என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.