சந்திரயான்-3 விண்கலத்தை ஜூலை 12-ம் தேதி விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1 விண்கலத்தை அனுப்பியது. அந்த சோதனை நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் விதமாக சந்திரயான்-2 விண்கலம் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டது.
இந்த சந்திரயான்-2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 2019 ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டு, 2019 செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது.
எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ.615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது.
இந்த விண்கலம் ஜூலை 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: ”நிலவு பற்றிய ஆய்வுக்கு தென் துருவத்தில் தரையிறங்க வேண்டியது அவசியம். அதைக் கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் லேண்டர், ரோவர்கலன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள இந்த விண்கலம், ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் வரும் ஜூலை 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.
சந்திரயான்-2 போல் இல்லாமல் 42 நாட்கள் பயணத்துக்கு பின்னர் லேண்டர் கலன் ஆகஸ்ட் 22-ம் தேதி விண்ணில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால் நிலவை பற்றிய பல்வேறு ரகசியகங்கள் தெரிந்து கொள்ளலாம். இதற்கிடையே என்விஎஸ்-2 எனும் வழிகாட்டுதல் செயற்கைக்கோளும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் மே 29-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.” என்று தெரிவித்தனர்.







