பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். கடந்த 40 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமுமின்றி இருந்தது. இந்நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பெட்ரோல் மீதான கலால் வரி ரூ. 8, டீசல் மீதான கலால் வரி ரூ.6 குறைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பணவீக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், வளர்ந்த நாடுகளிலும் விலை ஏற்றத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைத்திருக்கிறது. இதனால் மத்திய அரசுக்கு ஒரு நிதியாண்டில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மொத்த விற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பொதுப் பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு 15.08 சதவீதமாக அதிகரித்தது. உலக அளவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது. இதேபோல, மாநில அரசுகளிடமும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. எனவே, மாநில அரசும் வரியைக் குறைக்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.








