அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நிராகரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இரவிலும் சோதனை தொடர்ந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதனிடையே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனைக்கு சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.இந்நிலையில், நீதிமன்ற காவலை நிராகரிக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற காவல் ஏற்கனவே வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மனு செல்லத்தக்கதல்ல என்றும், எனவே மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.






