திருச்செந்தூர்- திருநெல்வேலி இடையே ரயில் போக்குவரத்துக்கான இருப்பு பாதை அமைக்கப்பட்டு முதன்முதலாக ரயில் சேவை தொடங்கியதன் நூற்றாண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
திருச்செந்தூர்- திருநெல்வேலி இடையே ரயில் போக்குவரத்துக்கான இருப்பு பாதை அமைப்பதற்கான பணிகள் 1904-ம் ஆண்டு தொடங்கப்பட்டு அதற்கான ட்ராபிக் சர்வேயும், பிரதம லைன் சர்வேயும் நடந்துள்ளது.1914-ஆம் ஆண்டு இப்பாதைகான பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜைகள் போடப்பட்டு, பணிகள் முடிந்து 1923-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி அப்போதைய சென்னை மாகாண ஆளுநராக இருந்த கோஷன் பிரபுவால் திறந்துவைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1923-ம் ஆண்டு இதே நாளில் திறக்கப்பட்ட திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் பாதையின் 100-வது ஆண்டு நிறைவு நாளை கொண்டாடும் வகையில் செய்துங்கநல்லூர் ரயில் பயணிகளும், செய்துங்கநல்லூர் நூலக வாசகர் வட்டமும் இணைந்து விழா கொண்டாடினர். விழாவில் ஸ்டேஷன் மாஸ்டர் ராஜகோபாலுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். மேலும் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தினை சுத்தமாக வைத்து கொள்வது, பயணிகள் மூலமாக ரயில் நிலையத்தினை மேம்படுத்த ஆவண செய்வது உள்பட பல உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இதேபோல் ஆறுமுகநேரி ரயில்வே வழக்கு குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி தலைமையில் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு புறப்பட்ட பயணிகள் ரயில் பூ மாலைகளுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் ரயில் ஓட்டுநர்களும், ரயில்வே பணியாளர்களுக்கும் பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதுதவிர திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லக்கூடிய காயல்பட்டினம், குரும்பூர் மற்றும் நாசரேத் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில் சேவை நூற்றாண்டு விழாவை உற்சாசகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அயராது முயற்சி எடுத்தவர் அன்றைய காலகட்டத்தில் நெல்லை ஜில்லா போர்ட் மெம்பரான ஆறுமுகநேரி எஸ்.பி. பொன்னையா நாடார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா