எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று சங்கநாதம் எழுப்பிய, பாவேந்தர் பாரதி தாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்று நாம் காணும் மறுமலர்ச்சி, தமிழ் இயக்கம் என்கின்ற நூலில், பாவேந்தர் பகிர்ந்த வைர வரிகளாக, இன்றைக்கும் நம் நெஞ்சில் உணர்ச்சி ஊட்டக் கூடியதாக அமைந்த சொற்கள் ஒவ்வொன்றும், தமிழுக்குப் பாவேந்தர் சூட்டிய மணி ஆரம் ஆகவும், தமிழர் எழுச்சிக்கு அவர் இட்ட வித்து ஆகவும் அமைந்து உள்ளது என குறிப்பிட்டுள்ளார். பாவேந்தர் பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, எதிர்பாராத முத்தம் இப்படி எண்ணற்ற காவியங்கள், என்றென்றும் நின்று நிலவி, தமிழர்க்கு எழுச்சியையும், உணர்ச்சியையும், உள்ளக் கிளர்ச்சியையும், தந்து கொண்டே இருக்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பெரியாரின், சிந்தை இனிக்கும் செந்தமிழ்க் கவிஞராகப் பாவேந்தர் போற்றப்பட்டார் என்றும், ஏ தாழ்ந்த தமிழகமே என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டம் அளிப்பு விழாவில் பேசிய பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் வரிகளாலேயே, தமிழகத்தை எழுச்சி பெறச் செய்வதற்கான கருத்துகளைத் தந்தார் என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார். பாவேந்தர் தம் வாழ்நாள் எல்லாம் தமிழுக்காகப் போராடியதால், அவரது பிறந்த நாளை, தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்றும், அண்மையில் பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்வில், ஆசிரியர் வீரமணி , அருமையான கோரிக்கையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வைத்தார் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
யாரும் கேட்காமலேயே, பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள் ஆகவும், அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாள் ஆகவும் அறிவித்து, அரசு ஊழியர்களை உறுதிமொழி ஏற்கச் செய்து வரலாறு படைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளைக் கொண்டாடுவதும், அந்த எழுச்சியின் அடிப்படையில், எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்… இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே என்று உறுதி பூணுவதும், காலத்தின் கட்டாயமாக உள்ளது என்றும் வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.