கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பதற்கு முன்பாக வகுப்பறையிலிருந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி மர்மான முறையில் உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை தேவை என்றும் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மிக தீவிரமடைந்து வன்முறையாக மாறியது.
இதில் போராட்டக்காரர்கள் பள்ளியின் வாகனங்கள், மேஜைகள், கண்ணாடிகள் என கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கி, எரித்து சாம்பலாக்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட 379 பேரை போலீசார் கைது செய்தனர். 125 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர் உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி பள்ளியில் உயிரிழப்புக்கு முன்பாக வகுப்பறையிலிருந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மாணவி மன சோர்வுடன் வகுப்பறையில் இருந்து விடுதிக்கு செல்லும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. மேலும் மாணவி ஸ்ரீமதி வகுப்பறையில் அமர்ந்து கடிதம் எழுதிய காட்சிகளும் சிசிடிவியில் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது, பள்ளியிலிருந்து எடுத்து சென்ற பொருட்களை மீண்டும் பள்ளியில் ஒப்படைக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அருகிலுள்ள கிராமங்களில் தண்டோரா மூலம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். பள்ளியிலிருந்து எடுத்து சென்ற கணினிகள், சிசிடிவி பதிவான ஹார்ட் டிஸ்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.








