அன்புஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி விசாரணை தொடக்கம்!

விழுப்புரம் அருகே குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்புஜோதி ஆஷ்ரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜாபருல்லா…

விழுப்புரம் அருகே குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்புஜோதி ஆஷ்ரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜாபருல்லா என்பவர் காணாமல் போனதாக புகார் எழுந்தது. அந்தப் புகாரின்பேரில் கடந்த 10-ம் தேதி போலீசாரும், அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது உரிய அனுமதியின்றி ஆஷ்ரமம் நடத்தி வருவதும், அங்கு பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும்
மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியதும், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஆஷ்ரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் மற்றும் பணியாளர்கள் சதீஷ், கோபிநாத், பிஜீமேனன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கை டிஜிபி சைலேந்திர பாபு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி
உத்தரவிட்டார். இதனையடுத்து, இந்த வழக்கின் முக்கிய ஆவணங்கள், மருந்து மாத்திரைகள், மடிக்கணிணி, 10  செல்போன்கள் ஆகியவற்றை
சிபிசிஐடி காவல் ஆய்வாளர்கள் குமார் கார்த்திகேயன் தனலட்சுமி ரேவதி ஆகிய
நான்கு பேர் கொண்ட குழுவினரிடம் எஸ்பி ஸ்ரீநாதா எஸ்பி அலுவலகத்தில் நேற்றைய
தினம் ஒப்படைத்தனர்.

ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிபிசிஐடி எஸ்பி அருண்பால கோபாலன் தலைமையில், ஏடிஎஸ்பி கோபதி அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினர் இன்று அன்புஜோதி ஆசிரமத்தில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கட்டப்பட்ட சங்கிலி, அடிக்கப் பயன்படுத்திய தடிகள் உள்ளிட்ட பொருட்களை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், ஆசிரமத்தில் இருந்த தடயங்களை தடவியல் துறை துணை இயக்குநர் சண்முகம் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் தடயங்களை சேகரித்து தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆசிரமதிலிருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 16 பெண்களை கல்பாக்கம் அரசு காப்பகத்திற்கு இன்று மாற்றினர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.