ஆந்திராவில் டிசம்பர் 9 முதல் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்க உள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியில் தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படியே இந்தியா முழுவதும் இன்றளவும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. நாடு விடுதலைக்குப் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 1980, 1990-களில் இடஒதுக்கீடு விவகாரம் முழு வீச்சாக உயிர்த்தெழுந்த போது இந்த கோரிக்கை தீவிரமடைந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை நடத்தியது. அண்மைகாலங்களில் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய முதல் மாநிலம் பீகார். ஆனால் இதற்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சாதக, பாதகமான தீர்ப்புகள் வந்தன. இந்நிலையில் தற்போது பீகார் அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பீகார் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 13 கோடி. இதில் பிற்படுத்தப்பட்டோர் 27.13%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01%, பிற்படுத்தப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 63.14% முற்படுத்தப்பட்டோர் 15.52% தாழ்த்தப்பட்ட மக்கள் 19.65%. பழங்குடி இன மக்கள் 1.69%. இவ்வாறு பீகார் அரசு அறிவித்துள்ளது.
இதில் முக்கியமாக 27% சதவீத இட ஒதுக்கீடு மட்டும் பெறும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் 64 % பேர் உள்ளனர். 10% சதவீத இட ஒதுக்கீடு பெறும் முற்படுத்தப்பட்ட மக்கள் 15.5 சதவீதம் பேர் மட்டுமே இருப்பது உள்ளிட்ட பல தகவல்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் பீகாரை தொடர்ந்து, ஆந்திர மாநில அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் பீகார் அரசு பின்பற்றிய நடைமுறையும் ஆந்திர அரசு முன்மொழிந்துள்ள நடைமுறையிலும் வித்தியாசம் உள்ளதாக சொல்லப்படுகிறது.
பீகாரில், இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், வருவாய்த் துறையினர் தலைமையில் பணிகள் நிறைவடைந்தன. ஆனால் ஆந்திராவில், கிராமச் செயலகத்தின் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பலரது மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளன. தன்னார்வலர்களை கொண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவது சரியானதாக இருக்காது என அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.
இந்த நிலையில் வருகிற டிசம்பர் 9-ந்தேதி சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்க உள்ளதாக மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் சீனிவாச வேணுகோபால கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.