அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய கூடாது என காவல்துறைக்கு
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியபட்ட வழக்கில், திருச்சியில் தங்கியிருந்து, கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் இரண்டு வார காலத்திற்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் திருச்சியில் கையெழுத்திட சென்ற போது அதிமுகவினர் 100ற்கும்
மேற்பட்டோர் திரண்டதாகவும், திமுக அரசையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் கண்டித்து கோஷம் எழுப்பியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ,பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு செய்தல், நோய்த்தொற்று பரப்பும் விதத்தில் ஊறு விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அரவிந்த் சுப்ரமணியன் ஆஜராகி அரசியல் உள் நோக்கத்துடன் வழக்கு பதியபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து மனு தொடர்பாக வழக்கு தொடர்பாக திருச்சி கண்டோண்மண்ட் காவல்துறை பதிலளிக்கவும், உதவிஆய்வாளரை வழக்கில் சேர்க்கவும் உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நவம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை, ஜெயகுமாருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்பான இறுதி அறிக்கையை தாக்கல் செய்யக்கூடாது எனவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.







