நெல்லையில் மத போதகர் காட்பிரே நோபிள் தாக்கப்பட்ட விவகாரத்தில் திருநெல்வேலி எம்.பி ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தில் இருதரப்பினரிடையே மோதல் இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்குமுன் சிஎஸ்ஐ பேராயர் பர்னபாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் , திமுக நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஆதரவாளர்களுடன் மோதலில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. மேலும் ஞானதிரவியத்தை, பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி தாளாளர் மற்றும் திருமண்டல மேல்நிலைப்பள்ளி நிலைக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த நெல்லை திருமண்டல பிஷப் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நெல்லை திருமண்டல சிஎஸ்ஐ டயோசீசன் அலுவலக வளாகத்தில் இரு தரப்பினர் இடையே நேற்று ஏற்பட்ட மோதலில் பிஷப்பின் ஆதரவாளர் மத போதகர் காட்பிரே நோபிள் என்பவர் திமுக எம்பி ஞானதிரவியம் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மதபோதகர் காட்பிரே நோபுள் பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில திமுக எம்பி ஞான திரவியம், ஜெயசிங், மூன்றடைப்பு ஜான், ஆடிட்டர் மைக்கேல் உள்ளிட்ட 33 பேர் மீது 5 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஞானதிரவியத்திடம் விளக்கம் கேட்டு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.